Tuesday, 5 January 2016

"1000' ரன்கள் அடித்து மும்பை பள்ளி மாணவர் உலக சாதனை: ஆட்டோ ஓட்டுநரின் மகன் அபாரம்

First Published : 06 January 2016 12:50 AM IST


மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் செவ்வாய்க்கிழமை 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார்.
 பண்டாரி கோப்பைக்காக பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்யா குருகுல பள்ளிக்கு எதிராக, கே.சி.காந்தி உயர்நிலைப் பள்ளி சார்பில் விளையாடினார் 10ஆம் வகுப்பு மாணவர் பிரணவ். இதில் அவர் 323 பந்துகளில் 59 சிக்ஸர்கள், 129 பவுண்டரிகள் விளாசி இந்த சாதனை ரன்களை சொந்தமாக்கினார்.
 117 ஆண்டு சாதனை முறியடிப்பு: இதற்கு முன்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஏ.இ.ஜே.காலின்ஸ் என்ற வீரர் கடந்த 1899-ஆம் ஆண்டு அடித்திருந்த 628 ரன்களே உலக அளவில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது.
 இந்நிலையில், 117 ஆண்டுகள் கழித்து 1,009 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார் பிரணவ்.
 அத்துடன், இந்திய பள்ளிகளிடையேயான கிரிக்கெட்டில், மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா என்ற மற்றொரு மாணவரின் 546 ரன்களையும் பிரணவ் முறியடித்துள்ளார்.
 அணி அளவிலும் சாதனை: பிரணவின் ரன் குவிப்பானது, அவரது பள்ளி அணியும் உலக சாதனை படைக்க சாதகமாக அமைந்தது.
 பிரணவின் கே.சி.காந்தி உயர் நிலைப் பள்ளி அணியானது, 3 விக்கெட் இழப்புக்கு 1, 465 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து சாதனை படைத்தது. முன்னதாக, அதன் எதிரணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
 இதற்கு முன்பாக, 1926ஆம் ஆண்டு நியூ செளத் வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விக்டோரியா அணி அடித்திருந்த 1,107 ரன்களே உலக சாதனையாக இருந்தது.
 அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுரையில் வாழ்த்து
 சச்சின்: "ஒரு இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்து சாதனை படைத்த முதல் வீரரானதற்கு வாழ்த்துக்கள் பிரணவ். கடின உழைப்புடன் இன்னும் புதிய உச்சங்களைத் தொட வேண்டும்'.
 ஹர்பஜன் சிங்: "நன்றாக விளையாடினாய் பிரணவ். எந்த கிரிக்கெட்டில் விளையாடினாய் என்பது முக்கியமல்ல. உனது ரன்கள் நம்பமுடியாதது. இன்னொரு சச்சின் உருவாகிறாரா?'

No comments:

Post a Comment