Tuesday, 8 March 2016

கும்பிட்டு கெஞ்சியும் கண்டு கொள்ளாமல் போனார் ஸ்மிருதி.. விபத்தில் இறந்த டாக்டரின் மகள் புகார்.


ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே யமுனா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் பாதுகாப்புக் கார் மோதி படுகாயமடைந்த டாக்டருக்குத் தேவையான சிகிச்சைக்கு உதவி செய்ய அமைச்சர் ஸ்மிருதி மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்த டாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்களது தந்தையின் மரணத்திற்கு அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போனதே காரணம் என்று அவரது மகளும், மகனும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தனது தந்தை விபத்தில் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்மிரிதியிடம் ஓடிப் போய் உதவி செய்யுமாறு அந்த டாக்டரின் மகள் கெஞ்சியுள்ளார். கையெடுத்தும் கும்பிட்டுள்ளார். ஆனால் ஸ்மிருதி அதைக் கண்டுகொள்ளாமல் விருட்டென்று கிளம்பிப் போய் விட்டாராம்.
யமுனா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில், பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஸ்மிருதி இராணியின் பாதுகாப்புக்காக வந்த காவலர்களின் கார் இன்னொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்தக் காரில் பயணம் செய்த டாக்டர் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
முன்னதாக இந்த விபத்து குறித்து டிவிட்டரில் கூறிய ஸ்மிருதி, நான் பத்திரமாக இருக்கிறேன். எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. காயமடையவில்லை. சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் ஸ்மிருதியின் கூற்றை விபத்தில் பலியான டாக்டரின் மகளும், மகனும் மறுத்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் டாக்டரின் மகள் சான்டிலி கூறுகையில், அமைச்சருடன் வந்த கார் மோதியதில் எங்களது கார் நிலை குலைந்து விபத்துக்குள்ளானது. நாங்கள் தூக்கி வீசப்பட்டோம். எனது தந்தை ரமேஷ் நாகர் படுகாயமடைந்தார்.
விபத்து நடந்ததும் அமைச்சர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து பார்த்தார். நான் அவரிடம ஓடிப் போய் கையெடுத்துக் கும்பிட்டு உதவி செய்யுமாறு கோரினேன். ஆனால் அவர் எதுவும் பேசாமல் போய் விட்டார். அவர் உதவி செய்திருந்தால் எனது தந்தை இந்நேரம் உயிர் பிழைத்திருப்பார் என்றார்.
ரமேஷ் நாகரின் மகன் அபிஷேக் கூறுகையில், எனது தங்கை அமைச்சரிடம் கெஞ்சியும் அவர் கேட்காமல் போய் விட்டார். அவர் எங்களுக்கு உதவி செய்யவில்லை. செய்ததாக அவர் கூறியது பொய் என்று கூறியுள்ளார் அவர்

No comments:

Post a Comment