Monday, 26 September 2016

​கோவை வன்முறை தொடர்பாக 801 பேர் மீது வழக்குப்பதிவு - 305 பேர் சிறையில் அடைப்பு


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 
இதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. 
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக நகரப்பகுதியில் 145 பேரும், புறநகர் பகுதியில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் திருச்சி, சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment