Wednesday, 23 March 2016

திருச்சி -சென்னை உள்பட ,கூடுதலாக 5 விமானங்கள் இயக்க திட்டம்:திருச்சி விமான நிலைய புதிய இயக்குநர் பேட்டி!


திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இங்கு புதிதாக 5 விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளது என்றார் நிலைய இயக்குநர் கே. குணசேகரன். 
திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குநராக கே. குணசேகரன் கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: 
திருச்சியிலிருந்து சிங்கப்பூர், துபை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவு இலக்கைதாண்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
கடந்த நிதியாண்டில் 4973 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நிகழ் நிதியாண்டில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
ஆனால், பிப்ரவரி மாதம் வரையில் மட்டும் சுமார் 6.075 மெட்ரிக் டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மார்ச் 31-ம் தேதியில் 6.500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதேபோல், பயணிகள் போக்குவரத்திலும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
கடந்த ஜனவரி மாதத்திலேயே 10 லட்சம் பயணிகளுக்கும் (1.2 மில்லியன்) அதிகமான பயணிகள் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பாக, திருச்சி-சென்னை இடையே 3-ஆக உள்ள விமான சேவையை 5 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். மார்ச் 28-ம் தேதி முதல் (கோடைகால அட்டவணைப்படி) இந்த புதிய சேவை தொடங்கும். இதில் இயக்கப்படும் 2 விமானங்களும் இரவு நேரத்தில் இயக்கப்படவுள்ளன. 
இதேபோல், சிங்கப்பூர்-திருச்சி இடேயே இயக்கப்படும் டைகர் ஏர்வேஸ் விமான நிறுவனமும் கூடுதலாக மேலும் இரு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று புகைக்கும் அறை கூடுதலாக அமைக்கப்பட உள்ளது என்றார்.

No comments:

Post a Comment