கோவை,
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவ கல்லூரி கட்டிடம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.மோடி இன்று கோவை வருகை
மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.இந்த விழாவில் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைப்பதற்காகவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வந்து சேரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.திறப்பு விழா
பின்னர் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் புறப்பட்டு 3.30 மணிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு பிரதமர் மோடி, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கிறார்.விழாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகிக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதி எம்.பி. பி.நாகராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.பொதுக்கூட்டம்
திறப்பு விழா முடிந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் மாலை 4.45 மணிக்கு கொடிசியா மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார்.கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பண்டாரு தத்தாத்ரேயா, அகில இந்திய பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ், அக்கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் எம்.பியான சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து மாலை 6 மணிக்கு காரில் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் 6.30 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில், 35 போலீஸ் சூப்பிரண்டுகள், 50 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் என 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் கோவை வந்து உள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் தனிப்பிரிவு (எஸ்.பி.ஜி.) ஐ.ஜி. யஷ்வந்த்குமார் ஜெத்வா தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகம், கொடிசியா மைதானம், பிரதமர் பயணம் செய்யும் சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.வெடிகுண்டு நிபுணர்கள்
கோவை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. பிரதமர் செல்லும் சாலை மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்திலும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்தில் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு தொழில்நுட்ப அதிகாரிகள் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவு மூலமும் சோதனை நடத்தப்படுகிறது.குண்டு துளைக்காத கார்கள்
கொடிசியா மைதானத்தில் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியில் உள்ளனர்.பிரதமர் பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத 3 கார்கள் கோவைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. பொதுக்கூட்ட மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார விளக்குகள் உள்பட அனைத்து பொருட்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.பிரதமரின் வருகையையொட்டி, கோவை அவினாசி சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கோவையில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், பாரதீய ஜனதாவின் முதல் தேர்தல் பிரசார கூட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது.இந்த பொதுக்கூட்டம் பாரதீய ஜனதாவுக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று அக்கட்சியினர் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment