Saturday, 23 April 2016

இன்னும் 35 ஆண்டுகளில் தண்ணீரையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை : ஆய்வில் தகவல்.


மும்பை: இன்னும் 35 ஆண்டுகளில், இந்தியாவில் நாம் உயிர் வாழ குடிநீரையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்ற ஆய்வறிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு வளர்ந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்த வளர்ச்சிக்காக நிலத்தடி நீராதாரங்கள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன.
 இதனால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து, பல மாநிலங்களில் தற்போதைய வறட்சி, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்படிப்பட்ட நிலையில், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 1951ம் ஆண்டு தனி நபர் ஒருவருக்கு தினசரி கிடைக்கும் நிலத்தடி நீரின் அளவு 14 ஆயிரத்து 180 லிட்டராக இருந்தது. இது 1991ல் பாதியாக குறைந்தது.
 2001ம் ஆண்டு மேலும் 35 சதவீதம் குறைந்து, 5,120 லிட்டர் ஆனது. இப்படியே நிலைமை சென்று கொண்டிருந்தால், 1951ம் ஆண்டில் கிடைத்த நீரில் 25 சதவீதம் அளவுக்குதான், 2025ம் ஆண்டு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டு இது, 22 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
ஏரி, குளங்களை தூர் வாராமல் மழை நீரை வீணாக கடலில் சென்று சேர விட்டுள்ளது, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மழையை பொய்த்து போக செய்யும் வகையில் மரங்களை வெட்டுவது போன்றவை இந்த ஆபத்துக்கு காரணங்கள் என பட்டியலிடுகிறது அந்த ஆய்வு. மேலும், வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், தேவைகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, அன்றாடம் கிடைக்கும் தண்ணீருக்கு ஆபத்து ஏற்படுவது வெகு தூரத்தில் இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment