Friday, 4 March 2016

தமிழகம், புதுச்சேரியில் மே 16ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறும் என்றும், மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார். 
அஸ்ஸாம்
அதன்படி, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியும் நடைபெறும்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் 6 கட்டமாக நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 11ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 
தமிழ்நாடு- புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி முன்புவரை போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருப்பது கட்டாயம். 5 நாட்களுக்கு முன்பே புகைப்பட வாக்காளர் அடையாள சீட்டு விநியோகிக்கப்படும். வாக்காளர் அடையாள சீட்டு விநியோகத்தை மத்திய பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.
தரைத்தளத்திலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படும். 
'நோட்டா'வுக்கு தனி சின்னம்
'நோட்டா'வுக்கு தனி சின்னம் வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். பணப்பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் உடன் நடமாடும், பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment